>என் ரோஜாப் பதியன்கள்-ஆத்மாநாம்

>

ஆத்மாநாம்

moderart-3

என்னுடைய இரண்டு ரோஜாப்பதியன்களை

இன்றுமாலை சந்திக்கப் போகிறேன்

நான் வருவது அதற்குத் தெரியும்

மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்

பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது

எனக்குப் புரிகிறது

நான் மெல்லப் படியேறி வருகிறேன்

தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன

புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்

செருப்பைக் கழற்றி முகம் கழுவி

பூத்துவாலையால் துடைத்துக் கொண்டு

கண்ணாடியால் எனைப்பார்த்து

வெளி வருகிறேன்

ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி

என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்

நான் ஊற்றும் நீரைவிட

நான் தான் முக்கியமதற்கு

மெல்ல என்னைக் கேட்கின்றன

என்ன செய்தாய் இன்று என

உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என

பொய் சொல்ல மனமின்றி

செய்த காரியங்களைச் சொன்னேன்

அதனை நினைத்துக் கொண்ட கணத்தைச் சொன்னேன்

சிரித்தபடி காலை பார்ப்போம்

போய்த் தூங்கு என்றன

மீண்டும் ஒருமுறை அவற்றைப் பார்த்தேன்

கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்

காலை வருவதை எண்ணியபடி

Leave a comment